மது போதையில் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள்

பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், தென்னல், அரியூர், கண்டமங்கலம், திருவண்டார் கோவில், திருபுவனை, மடுகரை, திருக்கனூர் மற்றும் விழுப்புரம், கடலூருக்கு பல்வேறு தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.

இந்த வாகனங்களை இயக்கும் ஒரு சில டிரைவர்கள் மது குடித்து விட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். மேலும் செல்போனில் பேசியவாறும் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.

புதுவை பஸ் நிலையத்திற்கு வரும் தனியார் பஸ்களில் பணியாற்றும் சில டிரைவர்கள், புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் டீ குடிக்க செல்வது போல் சென்று அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வாகனத்தை இயக்கும்போது அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு தன்மை இல்லாத நிலை உள்ளது. அவர்கள் திக்திக் பயத்துடன் பயணம் செய்கிறார்கள்.

அதேபோல் மதகடிப் பட்டு, மடுகரை, திருக்கனூர், கன்னிகோவில், பாகூர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை பகுதிக்கு செல்லும் பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள், செக்கர்கள், கிளீனர்கள், புரோக்கர்கள் என ஒரு சிலர் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதும், பயணிகளை தரக்குறைவாக பேசுவது, நேரமின்மை காரணமாக டிரைவர்கள் அவர்கள் நினைக்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு செல்வது, பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.

இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் திடீரென பஸ்களை நிறுத்தி சோதனை செய்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், செக்கர்கள், புரோக்கர்கள் மது அருந்தி உள்ளனரா? என பரிசோதனை செய்து அதன் பின்னரே வாகனங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com