பேனரை கிழித்ததாக வாலிபர் மீது தாக்குதல்- போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் மறியல்

தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
பேனரை கிழித்ததாக வாலிபர் மீது தாக்குதல்- போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் மறியல்
Published on

புதுச்சேரி:

புதுவை தவளகுப்பம் அடுத்த ஆண்டியார் பாளையம் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அப்போது அவர்களை அங்கிருந்தவர்கள் துரத்தி சென்றனர். இதில் அவ்வழியாக வந்த தானம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை பேனர் கிழித்ததாக கூறி தாக்கினர். தகவல் அறிந்தவுடன் தவளகுப்பம் போலீசார் தாக்கியவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதில் ஆண்டியார் பாளையதை சேர்ந்த ஜெயகாந்தனையும் உடன் அழைத்து சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த ஜெயகாந்தனின் ஊர் மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் விசாரிக்க வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பதில் எதும் கூறாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென தவளகுப்பம் போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையின் முடிவில் பிடிபட்ட ஜெயகாந்தனை போலீசார் விடுவித்தனர்.

இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com