

புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவில் சொந்தமான நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் 13 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணம் பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன்கோரி புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சிறையிலிருந்த சிவசாமிக்கு கடந்த 28-ந் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரழிவு நோயால் 2 நாட்கள் முன்பு அவரின் இடதுகால் சுண்டுவிரல் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து சிவசாமி சார்பில் ஆஜரான வக்கீல் சம்பத், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஜாமீன் கோரினார்.
அரசு தரப்பில் வக்கீல் லோகேஸ்வரன் ஆஜரானார். மருத்துவ கண்காணிபபாளர் அறிக்கை, சிகிச்சை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இதைடுத்து நீதிபதி மோகன், சிவசாமி மேல் சிகிச்சை பெற வரும் 18-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். அன்று சிவசாமி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
மருத்துவ சிகிச்சை தொடர்ந்தால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி அப்போதைய மாவட்ட பதிவாளரும், தற்போதைய நில அளவைத்துறை இயக்குனருமான ரமேஷ், அப்போதைய தாசில்தாரும், தற்போது மீன்வளத்துறை இயக்குனரமாக உள்ள பாலாஜி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த அதிகாரிகள் நீண்ட விடுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் ரமேஷ், பாலாஜி ஆகியோரை குற்றவாளிகளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் விரைவில் அதிகாரிகள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.