

சென்னை:
புதுச்சேரி சட்டப் பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி,சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இதை புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் ஏற்கவில்லை. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. நியமன எம்.எல்.ஏ.க்களை பதவி ஏற்க சபாநாயகர் அனுமதிக்க வில்லை. சட்டசபைக்குள் அவர்களை அனுமதிக்கவும் இல்லை.
இதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்றும் அவ்வாறு நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த 22ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடந்த வாரம் கவர்னர் உரை தொடர்பாக சட்டசபை கூட்டத்தில் கலந்துக் கொள்ள நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சென்றனர். ஆனால், அவர்களை சபைக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #tmailnews