கைது செய்ய முயன்ற போலீசாரை சரமாரியாக தாக்கிய ரவுடி கைது

புதுவையில் கைது செய்ய முயன்ற போலீசாரை சரமாரியாக தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான ரவுடிகள் போலீசாரை கண்டு பயப்படுவது இல்லை.

அவர்களை பிடிக்க செல்லும் போலீசாரை ரவுடிகள் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றும் இதேபோன்ற ஒரு சம்பவம் கோரிமேடு போலீஸ் சரகத்தில் நடந்துள்ளது.

சாரம் சக்திநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). ரவுடியாக செயல்பட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

இதில், ஒரு வழக்கில் கோர்ட்டு ஜாமீன் வழங்க முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் அவரை கைது செய்வதற்காக போலீஸ் ஏட்டு ராஜி தலைமையில் போலீஸ்காரர்கள் ஜெயகுமார், ராஜா ஆகியோர் ரமேஷ் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வீட்டுக்குள் ரமேஷ் இருந்தார். அவரை வெளியே வரவழைத்து போலீசார் விசாரித்தார்கள். இதனால் கோபம் அடைந்த ரமேஷ் போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.

போலீஸ் ஏட்டு ராஜியின் மார்பில் ஓங்கி குத்தினார். மேலும் கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் ஜெயகுமாரின் வலது கையை கடித்து குதறினார்.

அவருக்கு உதவ போலீஸ்காரர் ராஜா முன்வந்தார். அவரது கழுத்தினும் ரமேஷ் ஓங்கி குத்தினார். அந்த நேரத்தில் உருளையன் பேட்டை பீட் போலீசார் அங்கு வந்தனர். அவர்களையும் ரமேஷ் தாக்கினர்.

கடைசியாக அனைத்து போலீசாரும் சேர்ந்து அவரை பிடித்தனர். அப்போது போலீசாரை வெட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

பின்னர் வலுக்கட்டாயமாக போலீசார் ரமேசை அழைத்து சென்றனர். அவர் மீது போலீசாரை தாக்கியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com