செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Published on

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில்  திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு திரண்ட   கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com