சிமெண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்

ஊதியம் வழங்காத தனியார் சிமெண்டு தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிமெண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மருதையான் கோவில் அருகே ஜேப்பியார் என்கிற பெயரில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை உள்ளது. இந்த சிமெண்டு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், 14 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகை வைப்பு நிதியில் தொகை செலுத்தப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், வழங்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் சிமெண்டு தொழிற்சாலை அலுவலக ஊழியர்கள் 13 பேரை வெளியே போக விடாமல், உள்ளே சிறை பிடித்து தொழிற்சாலை வளாக நுழைவு வாயிலில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது அவர்கள் கடந்த 8 மாதங்களாக வேலை இழந்து தவித்து வருவதாகவும், ஆகவே, ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் ஜேப்பியார் தொழிற்சங்க தலைவர் அறிவழகன் தலைமையில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com