தனியார் பாலில் கலப்பட குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளது என்ற குற்றச்சாட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
தனியார் பாலில் கலப்பட குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
Published on

சென்னை:

‘ஹட்சன் அக்ரோ’, ‘டோட்லா’, ‘விஜய்’ ஆகிய தனியார் பால் நிறுவனங்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், பத்திரிகையாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி கொடுக்கிறார்.

இதற்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனங்களின் பால் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ‘ஆதாரம் இல்லாமல் தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சர் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.

இதன்பின்னர் இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமனும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சார்பில் வக்கீல் ராகவாச்சாரியும் ஆஜராகி வாதிட்டார்கள்.

இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com