நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மயங்கி விழுந்து மரணம்

நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் மயங்கி விழுந்து மரணம்
Published on

சேதராப்பட்டு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ் வெள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரசாமி. இவரது மகள் நீலவேணி (வயது 19). இவர், புதுவை நெட்டப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார்.

அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இன்று காலை முதல் ஷிப்டு பணிக்கு காலை 5.30 மணிக்கு சென்றார். அங்குள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற நீலவேணி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நீலவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நீலவேணியின் மர்ம சாவு குறித்து அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com