இந்தியாவில் பிறந்த நாள் கொண்டாடும் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தனது பிறந்தநாளை இங்கே கொண்டாடவுள்ளார்.
பிரதமர் மோடியுடன் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் (பழைய படம்)
பிரதமர் மோடியுடன் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் (பழைய படம்)
Published on

லண்டன்:

பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்டகாலம் இளவரசராக உள்ளவர் சார்லஸ். பிரிட்டனின் வேல்ஸ் இளவரசராக உள்ள சார்லஸ் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகிற நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ம் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என அவரது அரச அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் வருகிற நவம்பர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். 

இந்தியாவிற்கு இளவரசர் சார்லஸ் மேற்கொள்ளும் 10 வது அரசுமுறைப் பயணம் இதுவாகும்.  கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தருவது இது 2வது முறையாகும். 

சுற்றுப்பயணத்தின் போது புதுடெல்லியில் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பிரிட்டன்-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

மேலும் நவம்பர் 14ம் தேதி இளவரசர் சார்லஸ் தனது 71வது பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாட உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14 முதல் 18ம் தேதி வரை இளவரசர் சார்லசின் மூத்த மகனான இளவரசர் வில்லியமும் , வில்லியமின் மனைவி கேட் மிடில்டனும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com