பிரதமர் மோடி பேச்சு-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நிலையான தரத்தில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என பிரதமர் மோடி ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

நாட்டின் மொத்த ஏற்றுமதியை நடப்பு 2021-22ம் நிதியாண்டில் 30 லட்சம் கோடியாக உயர்த்த  மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த லட்சியத்தை எட்டுவது குறித்து பிரதமர் மோடி பங்கேற்ற ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம், வீடியோ கான்பரன்சிங்கில் நடந்தது.

திருப்பூரில், அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்கத்தில்  வீடியோ கான்பரன்சிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், துணை தலைவர்கள் வேலுசாமி, பழனிசாமி, இணை செயலாளர்கள் செந்தில்குமார், சோமசுந்தரம், பொருளாளர் மோகன், பொதுச்செயலாளர் விஜயகுமார் உட்பட ஏற்றுமதியாளர்கள் 40 பேர் இணைந்திருந்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்திய நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சிறந்த மற்றும் நிலையான தரத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யவேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு, வாய்ப்புகளை வசப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தவேண்டும்.

ஆர்கானிக் பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஏற்றுமதியாளருக்கு அரசு பக்கபலமாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாக வேண்டும்.

30 லட்சம் கோடி என்கிற வர்த்தக இலக்கை விரைந்து எட்டிப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.பிரதமரின் பேச்சு பின்னலாடை ஏற்றுமதி துறையினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com