

நாமக்கல்:
தமிழகத்தில் நாமக்கல், பல்லடம் பகுதிகளில் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கோழிகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கறிக் கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் கிலோ 140 ரூபாய்க்கு கறிக்கோழி விற்பனையானது. இது தற்போது 20ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்து 160 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. தோலுடன் உள்ள கோழி ரூ.160-க்கும் உரித்த கோழி ரூ.180-க்கும் விற்பனையாகிறது.
வெயில் காலங்களில் கோழிகளின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். அதேபோல் கோழிகளின் எடையும் குறைந்து காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை காலம் என்பதால் கோழிகளின் தேவை அதிகரித்து உள்ளது.
அதேபோல் கோவில் திருவிழா காலம் என்பதாலும், கோழிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கறிக்கோழி விலை உயர்ந்து இருப்பதாக நாமக்கல் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கறிக்கோழி விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.