

புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் வீரமரணம் அடைந்த விமானப்படை கமாண்டோவின் மனைவியிடம் இன்று ‘அசோக் சக்ரா’ விருதை அளித்தபோது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண் கலங்கினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் விமானப்படையை சேர்ந்த கமாண்டோ ஜோதி பிரகாஷ் நிராலா, இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தானும் வீர மரணம் அடைந்தார். அவரது இந்த தியாகத்தை பாராட்டி இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, ஜே.பி. நிராலாவின் மனைவி சுஷ்மானந்த், தாயார் மாலதி தேவி ஆகியோரிடம் ஜனாதிபதி இந்த விருதை வழங்கினார். அப்போது அவர்களின் முகத்தில் இருந்த சோகத்தை கண்டு துயரமடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண் கலங்கினார். பின்னர், தனது கைக்குட்டையால் கண்களையும், முகத்தையும் அவர் துடைத்து கொண்டார்.