மடகஸ்கர் ஜனாதிபதி, பிரதமருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மொரிசியஸ் மற்றும் மடகஸ்கர் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
புதுடெல்லியில் இருந்து 11-ம் தேதி புறப்பட்டு மொரிசியஸ் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டார். 12-ம் தேதி மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பயணத்தின்போது அந்நாட்டின் ஜனாதிபதி அமீனா குர்ஜிப்பையும், பிரதமர் பிரவிண்ட் ஜக்நாத்தையும் சந்தித்து பேசினார்.
அதன்பின் இன்று (14-ம் தேதி) மடகஸ்கர் நாட்டுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த்தை, அந்நாட்டு பிரதமர் ஆலிவர் மகாபலி சோலோனன்டிரசனா வரவேற்றார். ராம்நாத் கோவிந்த அங்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதுவே மடகஸ்கர் நாட்டுக்கு ஒரு முக்கிய இந்திய தலைவரின் முதல் பயணமாகும்.
ராம்நாத் கோவிந்துக்கு மடகஸ்கர் நாட்டின் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மடகஸ்கர் பிரதமர் மாளிகையில் அந்நாட்டு பிரதமர் ஆலிவர் மகாபலி சோலோனன்டிரசனா உடன் ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் மடகஸ்கர் ஜனாதிபதி ஹெரி ராஜோனரிமாம்பியானினாவை சந்தித்து பேசினார்.

