மான்செஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம்

பிரிட்டன் நாட்டின் மான்செஸ்டர் நகரில் 22 உயிர்களை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம்
Published on

பிரிட்டன் நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் நேற்றிரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது மனித குண்டு தீவிரவாதி நடத்திய பயங்கர தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த அறுபத்துக்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூன்றுபேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் அனுதாபமும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 22 உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலமடைய இறைவனை இறைஞ்சுகிறேன். இந்த துயரகரமான வேளையில் பிரிட்டன் அரசு மற்றும் மக்களுடன் இந்திய அரசு இணைந்திருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com