

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தை அடுத்த எருமைப்பட்டி கிராமம், தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 2வருடம் ஆகிறது. ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பாலகிருஷ்ணன் வெளி நாட்டில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது பாக்கியலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது பாக்கியலட்சுமி இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பாக்கிய லட்சுமியின் தாய் சாந்தி கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார், பாக்கியலட்சுமி உடலை மருத்துவ பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பாக்கியலட்சுமியின் சாவில் மர்மம் இருக்கின்றது என கோரி உரிய விசாரணை செய்ய வேண்டும் என பாக்கியலட்சுமியின் உறவினர்கள், கும்பகோணம் அரசு மருத்து வமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்.டி.ஒ. வீராச்சாமி, மறியல் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சில மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.