பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு- நீலகிரியில் 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து நீலகிரியில் 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகள்
விவசாயிகள்
Published on

ஊட்டி:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார வருமானமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் 3 தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வேளாண்மை துறை மூலம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறைகேடாக திட்டத்தில் சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

தொடர்ந்து பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன் பெறுபவர்கள் சிறு, குறு விவசாயிகளா? என்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு வேளாண்மை துறை உத்தரவிட்டது. அதன்பேரில் நீலகிரி மாவட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 48 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் 3 தவணைகளாக என மொத்தம் ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் சேர நிலத்துக்கான கணினி பட்டா அல்லது சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். நீலகிரியில் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் 44 பேர் விவசாயிகள் அல்லாதவர் பயன் பெற்று வருவது தெரியவந்தது. இவர்களது விவரங்கள் வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரியில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்கி திட்டத்தில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. விரைவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படும். மற்ற கணக்குகளும் சரியாக உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com