

நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் குரூப் ‘சி‘ தபால்காரர்கள் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். கோட்ட தலைவர் அழகுமுத்து தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பாட்சா முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஜேக்கப்ராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.
அஞ்சல் சேவையை பாதிக்கும் சீர்கேடுகளை உடனே சரி செய்ய வேண்டும். அனைத்து தபால் நிலையங்களுக்கும் புதிய கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க வேண்டும். இணையதள வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் கண்ணன், அனந்த கோமதி, வண்ணமுத்து, தங்கராஜ், சங்கர், முருகன், பிரபாகரன், விஜயலட்சுமி, பசுமதி, ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.