கவர்னர் கிரண்பேடி இப்தார் விருந்து: முதல்வர் நாராயணசாமி - எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

புதுவையில் மோதல் எதிரொலியாக கவர்னர் கிரண்பேடி அளித்த இப்தார் விருந்தை நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் புறக்கணித்தனர்.
இப்தார் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி இனிப்பு வழங்கியபோது எடுத்த படம்.
இப்தார் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி இனிப்பு வழங்கியபோது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கவர்னர் மாளிகையில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்படும். இதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் இப்தார் விருந்திற்கு கவர்னர் கிரண்பேடி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்து நேற்று மாலை 6-30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் 100-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி இனிப்பு வழங்கினார்.

நேற்றைய இப்தார் விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். விருந்து நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில்தான் இருந்தார்.

அதேபோல் உயர் அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து கவர்னர் கிரண்பேடியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ராஜ்நிவாசில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டது. தொலைபேசி வழியாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. ஆனால், யாரும் பங்கேற்கவில்லை. சில அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. அது அவர்களது விருப்பம். நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்றார். பின்னர் கவர்னர் - மக்கள் பிரதிநிதிகள் இடையேயான மோதல் தொடர்கிறதா? என்ற கேள்விக்கு, ‘மோதல் இல்லை. மோதல் முடிவுக்கு வந்துள்ளது’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com