புதுவை அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் கிடையாது: முதல்-அமைச்சர் அவசர ஆலோசனை

புதுவை சட்டசபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். #PondicherryCM #Narayanasamy
புதுவை அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம் கிடையாது: முதல்-அமைச்சர் அவசர ஆலோசனை
Published on

புதுவையில் பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் சட்டசபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இதனால் அடுத்த மாத செலவுக்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்த கவர்னர் நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.

எனவே கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெற்றதற்கு பிறகு தான் பட்ஜெட் நிதியை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு துறைகளிலும் இருக்கும் உபரி நிதிகளைக் கொண்டு சம்பளம் வழங்க அதிகாரிகள் ஆலோசித்தனர். இதற்காக சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியும் நடந்தது. ஆனால் இதிலும் சிக்கல் இருப்பது தெரியவந்தது.

ஒவ்வொரு துறையிலும் அனுமதி பெற்று தான் பணத்தை சம்பளமாக வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இன்றுவரை பட்டியல் தயாரிக்கப்பட்டு வங்கிக்கு அனுப்பப்படவில்லை.

வழக்கமாக மாத கடைசி நாளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே பட்டியல் அனுப்பப்பட்டு விடும். இன்று ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் இதுவரை பட்டியல் அனுப்பப்படவில்லை.

சம்பளத்திற்கான நிதியை திரட்ட முடியாததால் அந்த பணியை நிறுத்திவிட்டனர். எனவே நாளை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்ற நிலை உருவாகி உள்ளது. இன்னும் எத்தனை நாள் கழித்து சம்பளம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

இதற்கிடையே வேறு எந்த முறையில் சம்பளம் வழங்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தலைமை செயலாளர் அஸ்வினி குமார், நிதித்துறை செயலாளர் கந்தவேலு ஆகியோரை அழைத்து பேசினார்.

இனி நிதி ஒதுக்கப்பட்டாலும் கூட சம்பள பட்டியல் தயாரித்து அதன் பணிகளை முடிப்பதற்கு 2 நாள் ஆகும். எனவே நாளை சம்பளம் கிடைப்பதற்கு எந்த வாய்ப்பு இல்லை. வேறு நிதிகளை கொண்டு சம்பளம் கொடுப்பதாக இருந்தால் 2 அல்லது 3 நாட்களில் சம்பளம் கிடைக்கலாம்.

பட்ஜெட் மசோதா நிறைவேறியதற்கு பிறகு தான் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்றால் வாரக் கணக்கில் கூட ஆகலாம். புதுவையில் முதல் முறையாக இதுபோல ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PondicherryCM #Narayanasamy

X

Maalai Malar
www.maalaimalar.com