புதுவையில் பாலிடெக்னிக் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

புதுவையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் பாலிடெக்னிக் மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை பிச்சைவீரன்பேட் வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது46). தச்சு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய மகள் நந்தினி. (வயது21). இவர் புதுவை அடுத்த கெங்கராம்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது தந்தை ஜெயவேலு தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் இதேபோல ஜெயவேலு குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த வந்த நந்தினி தந்தையை திட்டினார்.

இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த நந்தினி வீட்டில் இருந்த (எலிபேஸ்ட்) வி‌ஷத்தை சாப்பிட்டு விட்டார். இதனால் மயங்கி விழுந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து ஜெயவேலு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com