கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு

கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி இருந்தது. #LokSabhaElections2019
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களில் காலையிலேயே திரண்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மதியம் சுட்டெரித்த வெயிலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்தது.

மாலை 3 மணிக்கு பிறகு மீண்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை 6 மணிக்கு வரிசையில் காத்து நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஓட்டுப் போட்டனர்.

மொத்தம் 19 லட்சத்து 58 ஆயிரத்து 577 வாக்காளர்கள் கொண்ட கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் இறுதி நிலவரப்படி பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 66.69 சதவீதமும், சூலூரில் 72.43 சதவீதமும், கவுண்டம்பாளையத்தில் 64.60-ம், கோவை வடக்கில் 58.91, கோவை தெற்கில் 60.28, சிங்காநல்லூரில் 60.11 சதவீதம் என சராசரி யாக 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

15 லட்சத்து 20 ஆயிரத்து 278 வாக்காளர்கள் கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் இறுதி நிலவரப்படி தொண்டாமுத்தூரில் 66.39, கிணத்துக்கடவு தொகுதியில் 69.36, பொள்ளாச்சியில் 75.79, வால்பாறையில் 71.27, உடுமலையில் 71.61, மடத்துக்குளத்தில் 72.36 என சராசரியாக 70.78 சதவீதம் வாக்குகள் பதிவானது.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத் தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் இறுதி நிலவரப்படி பெருந்துறையில் 81.66 சதவீதமும், பவானியில் 79.81, அந்தியூரில் 77.86, கோபியில் 80.67, திருப்பூர் வடக்கில் 62.67, திருப்பூர் தெற்கில் 62.08 என மொத்தம் 72.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பவானிசாகரில் 79.1, உதகையில் 66.9, கூடலூரில் 73.1, குன்னூரில் 71.7, மேட்டுப்பாளையத்தில் 74.3, அவினாசியில் 74.9 சதவீதம் என மொத்தம் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 4 சதவீதம் குறைந்து 64 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இம்முறை 2.2 சதவீதம் குறைந்து 70.78 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது. திருப்பூர் தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 76.27 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில் இம்முறை 3.33 சதவீதம் குறைந்துள்ளது. #LokSabhaElections2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com