பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: அரசாணையில் மாணவியின் பெயரை வெளியிட்டது சரியா?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #PollachiCase #PollachiAbuseCase
பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: அரசாணையில் மாணவியின் பெயரை வெளியிட்டது சரியா?
Published on

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

அதில் மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நிலையில் தமிழக அரசின் கெஜட்டில் மாணவியின் பெயர் இடம் பெற்றிருப்பது சரியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. வழக்கு பதிவு செய்யும் போது முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்படுவதைப் போல அரசாணையில் பெயர் விவரங்கள் இடம் பெறுவதில் தவறு இல்லை என்றும் அது பத்திரிகைகளில் வெளியாகிவிடக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது.

இந்த நிலையில் அரசாரணையில் மாணவியின் பெயர் வெளியான சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டிருப்பது அப்பட்டமான விதி மீறலாகும். இதன் மூலம் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் கட்சி கபட நாடகத்தை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாணவியின் பெயரை கெஜட்டில் வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி அரசு மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். #PollachiCase #PollachiAbuseCase

X

Maalai Malar
www.maalaimalar.com