அரசு வக்கீல் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

அரசு வக்கீல் நியமனத்தில், அரசியல் காரணங்கள் எதுவும் இருக்கக்கூடாது. திறமையான, நேர்மையான வக்கீல்களை தான் அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு வக்கீல் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வசந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு அரசு தரப்பில் ஆஜராக வக்கீல்களை நியமித்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, அரசு வக்கீல் நியமனம் தொடர்பான விதிகளை தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கி உள்ளது. எனவே, பிரிஜேஸ்வரர் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், புதிய விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘அரசு வக்கீல் பதவி என்பது தொழில் ரீதியான நியமனம் இல்லை. அந்த நியமனத்தில் பொதுநலனும் உள்ளது. எனவே, தகுதி வாய்ந்த வக்கீல்களை, அரசு வக்கீல்களாக நியமிக்க வேண்டும். அந்த நியமனம் ஒருதலைபட்சமாக இருக்கக்கூடாது’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

வழக்குகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், திருப்திகரமாகவும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், திறமையான வக்கீல்கள் நீதிமன்றங்களுக்கு அவசியம் தேவை.

நீதிமன்றங்களில் நல்லதொரு தீர்ப்பு வெளியாவதற்கு, அந்த வழக்கில் ஆஜராகும் திறமையான வக்கீல்களின் உதவியும் மிகவும் அவசியமாகும்.

எங்களை பொறுத்தவரை, அரசு வக்கீல் நியமனத்தில், அரசியல் காரணங்கள் எதுவும் இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, தேவையில்லாத வேறு எந்த சில காரணங்களும் இருக்கக்கூடாது. அதேநேரம், தனக்கு தான் அரசு வக்கீல் பதவியை தரவேண்டும் என்று எந்த ஒரு வக்கீலும் உரிமை கோர முடியாது. தகுதியான வக்கீல்களை, அப்பதவிக்கு பரிசீலிக்காமல் இருக்கவும் கூடாது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள விதியின்படி, அரசு வக்கீல்களை, தேர்வு குழுத்தான் தேர்வு செய்கிறது. அட்வகேட் ஜெனரல் மட்டும் தேர்வு செய்யவில்லை.

அரசு வக்கீல் பதவிகளுக்கு திறமையான வக்கீல்களை மட்டும் எதிர்காலத்தில் தேர்வு செய்து, நியமிக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். அரசு வக்கீல் பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, வக்கீல்களுக்கு தெரிவிக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட வக்கீல் சங்கங்களில் ஒட்ட வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com