

கோவை:
கோவை வால்பாறை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 42). இவர் நியூ மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது கடையில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவு வந்தனர். ஆனால் அவரது கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடையை நடத்தி வரும் பிரபு என்பவரது இறைச்சி கடையில் பொதுமக்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர் செந்தில்குமாருடன் வெள்ளைச்சாமி கடைக்கு சென்று அங்கிருந்த வாடிக்கையாளர்களை தனது கடைக்கு வருமாறு தகராறில் ஈடுபட்டார். அதைத் தட்டிக்கேட்ட வெள்ளைச்சாமியை அவர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வெள்ளைச்சாமி வால்பாறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் செந்தில்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் பிரபுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆத்திரமடைந்த பிரபு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போலீஸ்காரரை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் பிரபு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.