மதுரை மோப்பநாய் பிரிவு அலுவலகத்தில் போலீஸ்காரர் தற்கொலை

மதுரை மாநகர மோப்ப நாய் பிரிவு அலுவலகத்தில் தலைமை போலீஸ்காரர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய்களுடன் போலீஸ்காரர் விஜயகுமார்
மோப்ப நாய்களுடன் போலீஸ்காரர் விஜயகுமார்
Published on

மதுரை:

மதுரை மாநகர மோப்பநாய் பிரிவில் தலைமை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர், விஜயகுமார்(வயது 45). இவர் குடும்பத்தினருடன் குதிரைப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் இரவு பணிக்காக ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலகத்துக்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு அவரை பணிமாற்றி விடுவதற்காக மற்றொரு போலீஸ்காரர் அங்கு வந்தார். அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்த போது விஜயகுமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரருக்கு, மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். அவர் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு, ஆடு, நாய் ஆகியவையும் வளர்த்து வந்தார். இதற்கிடையே அவர் கடன் பிரச்சினையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு முன்பும் அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com