பூட்டப்படாத கதவு, டைரிக்குறிப்பு - 11 பேர் மர்ம மரணத்தில் 12வது நபருக்கு தொடர்பா?

டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணத்தில், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டாமலேயே இருந்துள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்ட டைரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். #BurariDeath
பூட்டப்படாத கதவு, டைரிக்குறிப்பு - 11 பேர் மர்ம மரணத்தில் 12வது நபருக்கு தொடர்பா?
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பல விசித்திர வழக்குகளை கையாண்ட போலீசார்களே, இந்த கூட்டு தற்கொலையில் ஈடுபட்டவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. முக்திப்பேறு பெறுவதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

தற்கொலை செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம டைரி  அவர்களது வீட்டில் கிடைத்தது.  

முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த டைரியில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.

இதேபோல,  சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்களுக்கு நேரான பைப், மீதமுள்ள வளைந்த பைப்புகள் 7 பெண்களை குறிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்கொலை நடந்த நேரத்தில் அவர்களது வீட்டின் வெளிப்புற கதவு தாழ்பாழ் போடாமல் வெறுமனே அடைத்து மட்டும் இருந்துள்ளது.

இதனை முக்கிய துருப்புச் சீட்டாக கருதும் போலீசார், தற்கொலை செய்யும் போது அதிசக்திகள் வந்து தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கதவை பூட்டாமல் வைத்திருக்கலாம். இல்லையெனில் 12-வதாக ஒரு நபர் அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்ற இரு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டுக்கு பின்னர் எழுதப்பட்ட அந்த டைரி முழுவதும் பக்தி சார்ந்த விஷயங்களே இருந்துள்ளன. 

அவர்கள் என்ன மாதிரியான பக்தி விஷயங்களை கடைபிடித்தனர் ஆகியவை குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com