சசிகலா மீதான எனது குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகி இருக்கிறது - போலீஸ் அதிகாரி ரூபா

பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது தொடர்பாக நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். #Roopa #Sasikala
சசிகலா மீதான எனது குற்றச்சாட்டு உண்மை என நிரூபணமாகி இருக்கிறது - போலீஸ் அதிகாரி ரூபா
Published on

சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில், சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது உண்மைதான், பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதுசம்பந்தமாக போலீஸ் அதிகாரி ரூபா கூறியதாவது:-

சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறேன். அது இன்னும் எனக்கு தரப்படவில்லை. முழுமையாகவும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அறிக்கையில் இன்னும் பல வி‌ஷயங்கள் வெளிவரலாம்.

நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. விசாரணை ஆழமாகி ஊடுருவி நடத்தி இருக்கிறார்கள். ஜெயில் அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி பதிவு செய்திருந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவை முதல் வகுப்பு கைதியாக நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் முதல் வகுப்பு கைதி அல்ல. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தனி சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கும் வசதி, தனி பார்வையாளர் கூடம், படுக்கை அறை, எல்.இ.டி. டி.வி. என வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த பிரச்சினையால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். என்னை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் இதை நான் தண்டனையாக கருதவில்லை. அதே நேரத்தில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதை நல்ல வி‌ஷயமாக கருதினேன். இப்போது நான் கூறிய குற்றச்சாட்டின்படி உண்மை வெளிவந்துள்ளது.

ஜெயிலில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் ஜெயில் விதிமுறைகளை மீறியது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கிய ஒருவருக்கு அதை முறையாக நிறைவேற்றாததால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகவும் இது உள்ளது.

அப்போதைய ஜெயில் இயக்குனர், சசிகலாவுக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது தவறு என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ஜெயில் சூப்பிரண்டும் இதற்கு பொறுப்பானவர் ஆவார்.

2014-ல் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தபோது இதே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததா? என்று எனக்கு தெரியாது. அப்போது நான் ஜெயில் அதிகாரியாக நியமிக்கப்படாததால் எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார். #Roopa #Sasikala

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com