

மதுரை:
மதுரை அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராமு. இவர் ஞானமலை கல்குவாரியில் வேலை பார்க்கும் கணவன்-மனைவியிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்றார். அப்போது போதையில் இருந்த அவர் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து குவாரி ஊழியர்கள் ஒத்தக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று போதையில் இருந்த ஏட்டுவிடம் விசாரித்தனர். அவர்களையும் போலீஸ் ஏட்டு ராமு தாக்க முயன்றார்.
நிலைமை எல்லைமீறி போனதால் ஒத்தக்கடை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவுப்படி குடிபோதையில் இருப்பதை கண்டறியும் சோதனைக்கு ஏட்டு ராமுவை அழைத்துச் சென்றனர். சோதனையில் அவர் போதையில் இருந்தது உறுதியானதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போலீஸ் ஏட்டு போதையில் பணியில் இருந்ததும், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.