சத்தியமங்கலத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

சத்தியமங்கலத்தில் தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட போலீஸ் ஏட்டு
தற்கொலை செய்துகொண்ட போலீஸ் ஏட்டு
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 45). இவர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு சாஜிதா, மதுமிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சாஜிதா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மதுமிதா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த ரமேஷ்குமார் அங்குள்ள தன்னுடைய அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வராததால் அவருடைய மனைவி பத்மா சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு ரமேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் கதறி துடித்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிய வந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேரில் சென்று ரமேஷ்குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com