எருது விடும் விழாவை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு, தடியடி

அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதை தடுக்க சென்ற போலீசார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினார்கள்.
எருது விடும் விழாவை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு, தடியடி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெறுவதாக கிராமமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காவல் துறையிடம் முன்அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் எருது விடும் விழாவிற்காக சுமார் 300 காளைகள் அழைத்து வரப்பட்டன. மேலும் விழாவை காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களிடம் இங்கு எருது விடும் விழா நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே விழா நடத்த கூடாது என்று கூறினர். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.

ஆனால் இளைஞர்களோ செல்ல மறுத்து போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாங்கள் கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்.

இதனால் இளைஞர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த சிலரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றார்கள். கடந்த ஆண்டும் இதே போல எருது விடும் விழாவின் போது மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com