தலைமறைவான பெண் வார்டனின் பின்னணியில் யார்-யார்? போலீசார் விசாரணை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் பெண் வார்டனருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்- யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Coimbatore #HostelOwner
தலைமறைவான பெண் வார்டனின் பின்னணியில் யார்-யார்? போலீசார் விசாரணை
Published on

கோவை:

கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் மாணவிகள், இளம்பெண்களை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை(32) போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 23-ந்தேதி புனிதா, விடுதி உரிமையாளர் ஜெகநாதன்(48) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. புனிதா 5 நாட்களாக போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு தலைமறைவாக இருக்கிறார்.

கணவரை பிரிந்து வாழும் அவருக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பிச் சென்ற புனிதா சென்னை அல்லது பெங்களூரில் பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மர்மமாக இறந்த நிலையில் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ஓட்டலுக்கு சென்றது உண்மை தான். ஆனால் பெண்களிடம் தவறாக நடந்ததில்லை. தொழில் போட்டி காரணமாக சிலர் என்ன திட்டமிட்டு பாலியல் வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என கூறி உள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் கடந்த 1½ வருடங்களாக விடுதியை நடத்தி வருகிறார்.

அவருக்கு பண ரீதியாக யாருடனும் பிரச்சனை இருந்ததா? அதன் காரணமாக அவர் சிக்க வைக்கப்பட்டாரா? என விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, புனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி மாணவிகள் சிலரை சுற்றுலா அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பெண்களுக்கு பீர் வாங்கி கொடுத்து குடிக்குமாறு வற்புறத்தி உள்ளார். மேலும், நான் போன் செய்பவர்களுடன் நீங்கள் வீடியோ காலில் ஜாலியாக பேசினால் போதும், அவர்கள் உங்களுக்கு வசதிகளை செய்து தருவார்கள் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டு தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

எனவே புனிதாவிடம் இதற்கு முன்பு பெண்கள் யாரும் ஏமாந்தார்களா? புனிதாவின் பின்னணி என்ன? அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்- யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் மொத்தம் 180 பேர் தங்கி இருந்தனர். இவர்களில் 150 பேர் விடுதியை காலி செய்து விட்டனர். இன்னும் 30 பேர் மட்டும் உள்ளனர். அவர்களும் வேறு விடுதிக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com