மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு திருஷ்டி சுற்றிய சூடம் காரணமா?: 4 பேரிடம் தீவிர விசாரணை

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு தேங்காயில் சூடம் ஏற்றியதுதான் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MeenakshiAmmanTemple
மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு திருஷ்டி சுற்றிய சூடம் காரணமா?: 4 பேரிடம் தீவிர விசாரணை
Published on

மதுரை:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு கோபுர வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடையில் பரவிய தீயால் அங்கிருந்த 40 கடைகள் எரிந்து சாம்பலானது.

கோவில் பிரகாரத்தில் உள்ள தூண்கள், சிலைகள் சேதம் அடைந்தன. வீரவசந்தராயர் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழுவை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நியமித்துள்ளார்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்துவதற்காக போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்த்தனர்.

அதில் 73-வது எண் கொண்ட கடையில் ஊழியர் தேங்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி கழித்தது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்துதான் முதலில் தீ பரவியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே கடை உரிமையாளர் முருகபாண்டி, ஊழியர் கருப்பசாமி உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேங்காய் சூடத்தால்தான் தீ விபத்து நடந்ததா? அல்லது மின் கசிவு உள்ளிட்ட வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே தீ விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்த நிபுணர்கள் குழு இன்று கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இடிபாடுகளில் உள்ள வெப்பத்தை தணிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே விசாரணை குழுவினர் இன்று முதல் விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com