அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி - காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். #Jallikattu
அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி - காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
Published on

ஆர்.எஸ்.மாத்தூர்:

தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.

இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com