

சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
முக்கிய சந்திப்புகளில் ஹெல்மெட் வேட்டையும் சத்தமில்லாமல் தொடர்கிறது. இதே போல மற்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கும் போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். தினமும் சராசரியாக 12 இடங்களில் இதற்காக போலீசார் சோதனை நடத்துகிறார்கள். கடந்த 9 மாதத்தில் 16 கோடியே 39 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் சிக்கியுள்ளனர்.
வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 43 ஆயிரம் பேரும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 60 ஆயிரம் பேரும் பிடிபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்ற 1½ லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்னலை மதிக்காமல் சென்ற 68 ஆயிரம் பேரும், செல்போன் பேசியபடியே வாகனங்களை ஓட்டிச் சென்ற 12 ஆயிரம் பேரும் அபராதம் செலுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு போலீசார் விழிப்புணர்வு குறும்படத்தையும் போட்டுக் காட்டுகின்றனர். சுமார் 1 மணி நேரம் ஓடும் இந்த குறும்படத்தை முழுவதுமாக பார்க்க வைத்த பின்னரே அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இதனால் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் நேரம் விரயமாகிறது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பொது மக்களை காக்க வைக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை. விழிப்புணர்வு படத்தை பார்த்து விட்டு பலர் அதனை கடைபிடித்து வருகிறார்கள் என்றார்.