ஜெயலலிதா நினைவு இல்லம் 4 மாதத்தில் தயாராகிவிடும் - நில ஆர்ஜித சட்டப்படி அரசு கையகப்படுத்துகிறது

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபின், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ததும் உடனடியாக நினைவிட பணிகள் தொடங்கும்.
ஜெயலலிதா நினைவு இல்லம் 4 மாதத்தில் தயாராகிவிடும் - நில ஆர்ஜித சட்டப்படி அரசு கையகப்படுத்துகிறது
Published on

சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டை அரசே எடுத்து கொண்டு நினைவிடமாக மாற்றும் பணியை செய்ய உள்ளது.

நில ஆர்ஜித சட்டப்படி வீட்டை அரசு எடுத்து கொள்ளும். அந்த வீட்டுக்கு என்ன விலை மதிப்போ அது ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.

வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நேற்று நடைபெற்றன. இதற்காக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் அளவிடும் பணியை செய்தார்கள்.

ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கலெக்டர் அன்புச்செல்வம் கூறியதாவது:-

ஜெயலலிதா இல்லத்தை விரைவிலேயே நினைவிடமாக மாற்றுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் விலை மதிப்பு என்ன என்பது பற்றி கணக்கிடப்படும்.

ஜெயலலிதா வீட்டுக்கு சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது முடிவாகும் வரை காத்திருக்க மாட்டோம். நிலத்தை மதிப்பிட்டு அதற்கான தொகையை அரசு கோர்ட்டில் டெபாசிட் செய்யும். சட்டப்பூர்வ வாரிசு யார் என முடிவு வந்ததற்கு பிறகு அந்த பணம் அவர்களுக்கு வழங்கப்படும்.

நில ஆர்ஜிதம் சம்பந்தமாக இந்த வீட்டை ஒட்டி உள்ள மற்றவர்களிடமும் ஆலோசனை நடத்த இருக்கிறோம்.

ஜெயலலிதா வீட்டில் சில அறைகளை வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர். அவற்றை அளவீடு செய்ய முடியவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவற்றை அளவீடு செய்வோம். ஆய்வு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இவ்வாறு கலெகடர் அன்புச்செல்வன் கூறினார்.

போயஸ் கார்டன் வீடு மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ளது. அதில் 21 ஆயிரத்து 662 சதுர அடியில் கட்டுமானங்கள் உள்ளன.

இந்த நிலத்தை 1967-ம் ஆண்டு ஜெயலலிதாவும், அவரது தாயாரும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் இந்த இடம் ரூ.43 கோடியே 96 லட்சம் மதிப்புடையது என்று ஜெயலலிதா தனது வேட்பு மனு சொத்து விவரத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இப்போதுள்ள மார்க்கெட் மதிப்புபடி வீட்டின் மதிப்பை மூலம் கணக்கிட உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கணக்கீடை செய்கிறார்கள். இதற்காக 20 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

அதன் பிறகு சென்னை கலெக்டர் அதன் மதிப்பை குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார். அதன்படி அரசு பண ஒதுக்கீடு செய்து ஆர்ஜிதம் செய்யும். உடனடியாக நினைவிட பணிகள் நடைபெறும். 4 மாதத்தில் நினைவிடம் தயாராகி விடும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com