லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிரவ் மோடி
நிரவ் மோடி
Published on

லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நிரவ் மோடியின் சிறைக்காவலை மேலும் 28 நாட்கள் (ஆகஸ்ட் 6-ம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com