

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் திருபுவனம் முன்னாள் நகர பா.ம.க. செயலாளர் ஆவார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இரவு ராமலிங்கம் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம்சுந்தர் திருவிடைமருதூர் போலீசில் புகார் அளித்தார். இந்த கொலை குறித்து திருவிடை மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில் மதமாற்றம் தொடர்பாக ராமலிங்கத்தை மர்ம கும்பல் தீர்த்து கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 16 பேர் மீது வழக்குபதிந்து, இதுவரை படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் டிரைவர் உள்பட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த மார்ச் 14-ந் தேதி மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் பாக்கு விநாயகன் தோப்பு பகுதியைச் சேர்ந்த சாலி என்கிற மைதீன்அகமது சாலி (51) என்பவரை தேசிய புலானாய்வு அமைப்பினர் நேற்று மாலை திருவிடைமருதூரில் கைது செய்தனர்.