நெல்லை கிராம மக்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடிய பிரதமர் மோடி

டிஜிட்டல் இந்தியா திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. #DigitalIndiaKiBaatPMKeSaath
நிகழ்ச்சியில் கிராம மக்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திரமோடி உரையாடிய காட்சி.
நிகழ்ச்சியில் கிராம மக்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திரமோடி உரையாடிய காட்சி.
Published on

நெல்லை:

நாடு முழுவதும் பொதுச்சேவை அமைப்பு மூலமாக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் மூலமாக சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பிரத்யேக ஸ்கிரீன் அமைக்கப்பட்டு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களும் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டிருந்தன.

நெல்லை மாவட்டத்தில் இருந்து பொதுச்சேவை மையம் மூலமாக பயன்பெற்ற பயனாளிகள் 5 பேர் மற்றும் பணபரிவர்த்தனைகளை தெரிந்து கொண்ட கிராம மக்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கிராம மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் மக்கள் எந்தளவுக்கு பயன் பெற்றுள்ளனர், பொதுச் சேவை மையம் மக்களுக்கு எந்தளவு பயனுடையதாக உள்ளது என்பது பற்றி பேசினார். 15 நிமிடம் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எனினும் கிராம மக்கள் யாரும் பிரதமரிடம் கான்பிரன்ஸ் மூலமாக பேசவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்சேவை மைய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத் குரியாகோஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் 212 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் உள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச்சேவை மையம் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக அனைத்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறோம் என்றார். #DigitalIndiaKiBaatPMKeSaath #PMModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com