

உலக கழிவறை தினத்தில், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது பொறுப்பை மறு உறுதி செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
உலக கழிவறை தினத்தை 2001-ம் ஆண்டு உலக கழிவறை அமைப்பு உருவாக்கியது.
13 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2013-ம் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந் தேதி உலக கழிவறை தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது.
அதைத் தொடர்ந்துதான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந் தேதி உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் மூன்றில் ஒருவர் கழிவறை வசதியின்றி வாழ்கிற நிலை உள்ளது. இந்த நிலையை ஒழித்து, அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைக்க பாடுபட வேண்டும் என்பது இந்த நாள் தோற்றுவிக்கப்பட்டதின் அடிப்படை அம்சம் ஆகும்.
இந்த நாளில் உலக மக்களுக்கு அடிப்படை கழிவறை வசதியின் முக்கியத்துவம் குறித்து கூறுவதும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கிய நிகழ்வாக அமைந்து வருகிறது. நமது நாட்டிலும் நேற்று உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டார். அதில் அவர், “உலக கழிவறை தினத்தில் நமது நாட்டில் உள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் நமது பொறுப்பை மீண்டும் உறுதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, ஒரு காட்சி தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அதில், திறந்தவெளியில் மலம் கழித்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதின் அவசியம் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தரக்கூடிய சிறந்த பரிசு, கழிவறை வசதிதான் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.