

புதுடெல்லி:
இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் உடன் சந்தித்து பேச உள்ள மோடி, உலக பொருளாதார கருத்தரங்கு சார்பில் நடக்கும் அமர்வில் சிறப்பு உரையாற்றுகிறார்.
தாவோஸ் நகரில் நடக்க உள்ள இந்த அமர்வில் உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் தலைவர்கள், தனியார் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்கின்றனர். 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கருத்தமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தனது அமர்வை தாவோஸ் நகரில் நடத்துகிறது.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் சாகித் கான் அப்பாஸி கலந்து கொள்ள உள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்தித்து பேசுவார்களா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என வெளியுறவு அமைச்சக செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் மிகக்குறுகலானது, 24 மணி நேரம் மட்டுமே அவர் அங்கு இருக்க உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர்களில் தேவகவுடா 1997-ம் ஆண்டு இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்தார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி இதில் பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.