

பிரதமர் நரேந்திர மோடி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்களை இன்று டெல்லியில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் கோபிச்செட்டிப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வ கண்ணன் ஆகியோர் இந்த நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
இவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு எனது பாராட்டுகள்!
நமக்கு அளப்பரிய ஞானத்தை அளிப்பவர்களும் உயர்ந்த வழிகாட்டிகளாகவும் திகழும் ஆசிரியப் பெருமக்களில் நல்லாசிரியர் விருது பெறுபவர்களை சந்தித்து, இளம் மனதுகளை செதுக்கி பண்படுத்தும் அவர்களின் பணி தொடர்பான அனுபவங்களை அறியும் வாய்ப்பு இன்று கிடைக்கப் பெற்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.