கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானது - பிரதமர் மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானது என்று பிரதமர் மோடி கூறினார். #PMModi #Sabarimala #KeralaGovernment
கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானது - பிரதமர் மோடி
Published on

கொல்லம்:

கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பா.ஜனதா விரும்பியது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கியப் பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது. இவர்களைப் போன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மோசமானதுதான்.

முத்தலாக் விவகாரத்திலும் காங்கிரசும், இடதுசாரியும் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.

இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com