

அபுதாபி:
வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து தற்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நய்ஹானை சந்தித்து பேசினார், அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், எண்ணெய் மற்றும் ஐந்து முக்கிய துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து, அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற மோடி, மரியாதை செலுத்தினார். பின்னர், அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியர்கள் கூடிய அரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
வளைகுடா நாடுகள் இந்தியர்களின் இரண்டாவது தாயகமாக உள்ளது. இங்கு இந்து கோவிலை கட்ட அனுமதித்த பட்டத்து இளவரசருக்கு 125 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கோவில் கட்டிடக்கலை மற்றும் வசீகரம் ஆகியவற்றிற்கான தனித்துவம் மிக்க ஒன்றாக மட்டுமின்றி, வாசுதைவ குடும்பகம் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும்.
வணிகத்தை தாண்டியும் இந்தியா - ஐக்கிய அமீரக உறவு என்பது தனித்துவமானது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சாதனைகளை அனைவரும் பேசுகின்றனர். எளிதில் தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா 100-வது இடத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு மோடி பேசினார். மேலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அரசின் உறுதியான நடவடிக்கைக்கு சான்று என அவர் பெருமையாக குறிப்பிட்டார். #ModiInUAE #AbuDhabi #TamilNews #PMModi