கிசான் முறைகேடு- திருப்பூரில் 2,500 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 500 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு
வங்கி கணக்கு
Published on

திருப்பூர்:

பி.எம். கிசான் என்று அழைக்கப்படும் பிரதமரின் விவசாயி திட்டம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாயி (பிஎம்-கிசான்) திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 2000-ம் என மொத்தம் ரூ. 6000-ம் நிதி உதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி பலரிடம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் விசாரணை நடந்து வருகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 500 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பிரதமரின் கிசான் திட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 1500 பேர் திருப்பூர் மாவட்டத்தில் வங்கி கணக்கு வைத்து முறைகேடாக நிதி உதவி பெற்று இருப்பது தெரியவந்தது. இதை தவிர வருமான வரித்துறை செலுத்துபவர்களும் நிதி உதவி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை தற்போது முறைப்படுத்தி உள்ளோம்.

257 பேரிடம் பணம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.75 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணமும் வருகிற 20-ந் தேதிக்குள் முழுமையாக மீட்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com