

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரெயில் பாதையை விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த வழித்தடம் நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் தற்போது இணைக்கும் வகையிலும், பின்னர், 38.23 கிலோமீட்டர் நீளத்தில் ஜனக்புரி பகுதிவரை நீட்டிக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் இணைக்கும் 12.5 கி.மீட்டர் தூரம் கொண்ட புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.