பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com