குருவிகுளம் அருகே அரசு மாணவிகள் விடுதியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

குருவிகுளம் அருகே சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை செய்த விடுதி
மாணவி தற்கொலை செய்த விடுதி
Published on

கழுகுமலை:

குருவிகுளம் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கனகராஜ். பாத்திர வியாபாரி. இவரது மகள் தங்கபிரியா (வயது 16). இவள் குருவிகுளம் அருகே உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்நிலையில் தங்கபிரியா சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. எனவே ஆசிரியர்கள் பள்ளிக்கு பெற்றோரை அழைத்துவர மாணவியிடம் கூறியுள்ளனர். இதன்படி மாணவி தங்கபிரியா பெற்றோரை அழைத்து வந்தார். இதன் காரணமாக பெற்றோர் அவளை கண்டித்துள்ளனர்.

இதில் மனவேதனை அடைந்த தங்கபிரியா கடந்த 2 நாட்களாக தோழிகள் யாருடனும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தங்கபிரியா விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக விடுதி காப்பாளர் வாசுகிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு மாணவி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “ எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com