கேரளாவுக்கு 15-ந்தேதி வருகை- பிரதமர் மோடி விழாவில் பினராயி விஜயன் பங்கேற்பு

கேரளாவுக்கு 15-ந்தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். #PinarayiVijayan #pmmodi #bjp
கேரளாவுக்கு 15-ந்தேதி வருகை- பிரதமர் மோடி விழாவில் பினராயி விஜயன் பங்கேற்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.

கேரளாவில் எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆனாலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பாரதீய ஜனதா கட்சிக்கும் தான் கேரளாவில் தொடர் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி தற்போது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் இதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி மாநில அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவில் மாநில அரசுடன் மோதல் போக்கை பாரதீய ஜனதா கடைபிடித்து வரும் சூழ்நிலையில் ஒரே நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 4 வழிச்சாலையை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக 15-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் அன்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைகிறார்.

பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.20 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறார். அங்கு நடைபெறும் விழாவில் 4 வழிச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஓ.ராஜகோபால் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் கேரளா வருகை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மந்திரி மேழ்சிகுட்டி அம்மா உறுதி செய்துள்ளார். #PinarayiVijayan #pmmodi #bjp

X

Maalai Malar
www.maalaimalar.com