

பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். திருமணமாகாதவர். இவருடைய தந்தை இறந்து விட்டார். இதனால் தாயுடன் வறுமையில் வாடி தவித்து வந்தார்.
இதையடுத்து, அந்த இளம்பெண் அதே பகுதியில் வசிக்கும் பெரியப்பா மகன் சதீஷ்குமார் (வயது 47) நடத்தி வரும் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் ரீ-சார்ஜ் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
சதீஷ்குமார் அண்ணன் முறை என்பதால், அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் அந்த இளம்பெண் தனது தாயுடன் வாடகைக்கு தங்கியிருந்தார். சதீஷ் குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது செல்போனில் வேறொரு புதிய சிம்கார்டு போட்டு அறிமுகம் இல்லாத நபர் போல், அந்த இளம்பெண்ணிடம் சதீஷ் குமார் பேசி வந்தார். இளம்பெண் தங்கை முறை என்பதையறிந்தும், அவரை விரும்புவதாக கூறி யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் போனில் பேசி வந்துள்ளார்.
போனில் பேசி தன்னுடன் பழகும் நபர் அண்ணன் என்பதை அறியாத அந்த இளம்பெண்ணும் விரும்பி உள்ளார். தங்கையுடன் நெருக்கமாக பேசிய செல்போன் உரையாடலை அவர் பதிவு செய்துள்ளார்.
பிறகு போனில் பேசிய நபர் ‘நான் தான்’ என்று தங்கையிடம் கூறி சதீஷ் குமார் செல்போன் உரையாடலை வைத்து மிரட்டி ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், அண்ணணின் வீட்டை காலி செய்து விட்டு வேறு வாடகை வீட்டிற்கு தாயுடன் சென்றுவிட்டார்.
வேலையையும் மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட சதீஷ் குமார் ‘செக்ஸ் தொந்தரவு’ செய்துள்ளார். இதுகுறித்து மேல்பட்டி போலீசில் இளம் பெண் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் (பொறுப்பு) வழக்குப் பதிவு சித்தப்பா மகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த சதீஷ்குமாரை கைது செய்தார். பிறகு, குடியாத்தம் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews